பொன்னி .. ஒரு சொம்பு தண்ணி எடுத்தாம்மா.....
’இந்தா வாறேன்ப்பா’......
வீட்டு வாசலில் உள்ள கல்லில் அமர்ந்து பல் துலக்கிக் கொண்டிருக்கிறார், முனுசாமி.
என்னைய்யா இன்னும் வேலைக்குக் கிளம்பலையா? என்று கேட்டுக் கொண்டே வருகிறான் கருவாயன்.
இல்லைய்யா, முருகன் கொத்தனார் ஒரு வாரம் வேலை இல்லைனுட்டாரு. டவுண்காரப் பயலுகலும் வேலைக்கு கூப்பிட மாட்டேங்கிறாய்ங்க. என்ன செய்யுறதுனு தெரியாம உட்காந்துக்கிட்டிருக்கேன்.
’இந்தாங்கப்பா தண்ணி’....
தண்ணீரைக் கொடுத்து விட்டு, வாசலில் கிடந்த பாத்திரங்களை துலக்குவதற்கு அமர்ந்து விட்டாள் பொன்னி.
காலைல 10 மணிக்கு உட்காந்து பல்லு விலக்கும் போதே தெரியுது, நீரு சும்மாதான் இருக்கீர்னு. சாயங்காலம் ஒரு இடத்துக்கு வர்றீரா? சம்பளம் 250 ரூபா கிடைக்கும், சும்மா உட்கார்ந்திருந்தா போதும் என்கிறான் கருவாயன்.
அதென்ன வேலைய்யா, சும்மா உட்கார்ந்திருக்குற வேலை?
அது ஒண்ணுமில்ல, டவுண்ல எதிர்க்கட்சிக்காரங்க மாநாடு நடத்துறாங்க, அதுல கலந்துக்கத்தான் 250 ரூபா. நாள மறுநாளு ஆளுங்கட்சிக்காரங்க மாநாடு நடக்குது, அதுல கலந்துக்கிட்டா 500 ரூபா தர்றாங்க. சாயங்காலம் நான் போறேன், நீரு வர்றீரா?
’இல்லையா, நான் வரலை’....
பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீரே, ‘வாழப் பழத்த உரிச்சு தான் தர முடியும் ஊட்டியுமா விட முடியும்’
சாயங்காலந்தானே மாநாடு, நான் யோசிச்சி சொல்றேன்.
அப்பா, குளிக்கிறதுக்கு வெந்நீரு வைக்கவா? என்கிறாள் பொன்னி.
இல்லம்மா, பச்ச தண்ணிலயே குளிச்சிக்கிறேன்.
பொன்னியோட அம்மா போனதுக்கு அப்புறம், இவளுக்காக தான் இன்னும் உசுரோட இருக்கேன். நல்லா படிக்க வைக்கிறதுக்கும் வசதியில்ல. ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்திட்டா நானும் நிம்மதியா போய்ச் சேர்ந்திருவேன்.
சரி.. சரி.. பழசெல்லாம் எதுக்கு? விடய்யா. நான் சாயங்காலம் 4 மணி போல வர்றேன் என்று கூறி விட்டுக் கிளம்பினான் கருவாயன்.
அப்பா, கூரையெல்லாம் பழசாயிருச்சு, ஒரே செத்தையா இருக்கு, மழையடிச்சா ஒழுகுது. புதுக் கூரை மாத்தணும்ப்பா.
நீ உண்டியலில கொஞ்சம் பணம் சேர்த்து வைச்சிருந்தேலம்மா, அதை எடுத்து வை, நான் குளிச்சிட்டு வர்றேன் என்கிறார் முனுசாமி.
பொன்னி, அந்த பணத்தை கொண்டு வா, கடை வரைக்கும் போகணும்.
புதுக் கூரைங்க வாங்கவாப்பா?
மெளனத்துடன் நகர்கிறார் முனுசாமி.
கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய முனுசாமி, ஒரு பை நிறைய சில திண்பண்டங்களுடன் வீட்டினுள் நுழைகிறார்.
’என்னப்பா’ இவ்வளவு பண்டங்கள், யாரும் விருந்தாளிங்க வர்றாங்களா?
பொன்னியின் கேள்விக்கு பதில் ஒன்றும் கூறாமல் வந்த களைப்பில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார் முனுசாமி.
சாயங்காலமாச்சு! விருந்தாளிகளும் யாரும் வர்ற மாதிரி தெரியலை. அப்பா வாங்கியாந்த பண்டங்களெல்லாம் அப்பிடியே இருக்கு.... என்று புலம்பிக் கொண்டே இருந்தாள் பொன்னி. அப்போது அங்கு வந்த கருவாயன், பொன்னி உங்க அப்பாவைக் கூப்பிடு, மாநாட்டுக்கு வர்றாரா இல்லையான்னு கேளு? என்றான்.
வேறு வழியில் வருகிறேன், என்கிறார் முனுசாமி.
என்னத்தையா சொல்றீரு, ஒன்னும் விளங்க மாட்டிக்குது என்றான் கருவாயான்.
பொன்னி, அந்த தின்பண்டங்களை எல்லாம் எடுத்தாம்மா...
இந்தாங்கப்பா..... அப்பா இதெல்லாம் யாருக்கு?
டவுண்ல கட்சி மாநாடு நடக்குதுல, அங்க கூட்டம் நெறையா வரும், இந்த பண்டங்கள் எல்லாம் அங்க கொண்டு போய் விக்கிறதுக்குத் தான் என்று கூறி விட்டுக் கிளம்பினார் முனுசாமி.
நின்று கொண்டிருந்த கருவாயன் எதுவும் பேசாமல் வெடுக்கென்று கிளம்பி விட்டான்.
கட்சி மாநாட்டில், ’தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க’ என்று கத்திக் கொண்டிருந்தான் கருவாயன்.
’தன் தின்பண்டங்களின் பெயர்களை வாய் வலிக்க '.............. கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார் முனுசாமி.
’தன் தின்பண்டங்களின் பெயர்களை வாய் வலிக்க '.............. கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார் முனுசாமி.
No comments:
Post a Comment