Monday, December 26, 2011

புங்க விதையிலிருந்து பயோ டீசல்!

-------------- எஸ்.கார்த்திகேயன் -------------

புங்க விதையிலிருந்து பயோ டீசல் தயாரித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள் மயிலாடுதுறை வடகரை கிராமப்பள்ளி மாணவிகள்.

(இடமிருந்து வலம்) ஆசிரியை ரோஸ்னா பர்வின் மற்றும் மாணவியர் லியானா ஃபஹஜத்  -  அரஃபாத் நிஷா.

        புங்க மரங்கள் நிறைந்த அழகிய சூழலில் அமைந்திருக்கிறது, நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே வடகரை கிராமத்திலுள்ள ஹஜ்ஜா சாரா அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி. மரத்திலிருந்து தினந்தோறும் உதிரும் புங்கம் காய்கள் குப்பைகளோடு சேர்ந்து வீணாவதைக் கண்டனர் அந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அரஃபாத் நிஷா மற்றும் லியானா ஃபஹஜத்.

       குப்பை என வீணாகும் பொருளிலும் ஒரு பயன் இருப்பதை உணர்ந்தனர் அவர்கள். புங்க மர விதையிலிருந்து பயோ டீசல் எடுக்க முடியும் என்ற தகவலை அறிந்து அதை செயற்படுத்த முயன்றனர்.

        பள்ளியின் தாவரவியல் ஆசிரியை ரோஸ்னா பர்வின் வழிகாட்டுதலுடன், புங்க விதையிலிருந்து பயோ டீசல் தயாரித்துக் காட்டினர்.
அதுமட்டுமில்லாமல், தாங்கள் தயாரித்த புங்க எண்ணெயைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்கிக் காட்டினர்.

        தங்களது ஆய்வு குறித்து பெருமையுடன் விவரித்தனர் லியானா ஃபஹத்தும், அரஃபாத் நிஷாவும்.

        “நன்கு வளர்ந்த புங்க மரத்திலிருந்து ஆண்டுக்கு 9 முதல் 90 கிலோ வரை விதை கிடைக்கும். இந்த விதையிலிருந்து புங்க எண்ணெய் தயாரிக்க முடியும் என்பதை அறிந்தோம். 4 கிலோ விதையிலிருந்து 1 கிலோ புங்க எண்ணெய் எடுக்க முடியும். 1 கிலோ எண்ணெயிலிருந்து 3 யூனிட் மின்சாரம் கிடைக்கும். எளிதில் கிடைக்கும் புங்க எண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தும் போது அதிக விலையுடைய பெட்ரோல் டீசல் பயன்பாடு குறையும்” என்று புள்ளி விவரம் தருகிறார்கள் இருவரும்.

        புங்க விதைகளை நன்கு காய வைத்து அதை பின் நன்கு வடிகட்டி அந்த எண்ணெயை பயோ டீசலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் இவர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்க, உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

       “மெர்சீடஸ் என்ஜின் பொருத்தப்பட்ட அம்பாசிடர் காரை ஆய்வுக்காக பயன்படுத்தினோம். சுத்தமான பயோ டீசலைக் கொண்டு நேரடியாக என்ஜினை இயக்க முடியாது. ஆகவே, இரு வழிக் குழாய்களின் உதவியால் முதலில் பெட்ரோல் டீசல் கலனிலிருந்து சிறிது நேரம் என்ஜினை இயங்கச் செய்துவிட்டு, பின் புங்க மர பயோ டீசல் மூலம் இயங்கச் செய்தபோது, அந்த அதிசயம் நிகழ்ந்தது. பெட்ரோல்  டீசலில் இயங்கிய போது என்ஜின் சற்று உதறலுடன் காணப்பட்டது. ஆனால், பயோ டீசலில் என்ஜின்  மென்மையாக இயங்கியது. அத்துடன், அது எரிந்து வெளியிடும் புகையும் கரியை உமிழாமல், கண்ணை உறுத்தாமல், மூக்கை நெருடாமல், சுற்றுப்புறச்சூழலை கெடுக்காத வகையில் இருந்தது” என்று விவரிக்கும் மாணவிகள், தங்களின் ஆய்வுக்கு உதவியாக இருந்தவர் ரோஸ்னா பர்வீன் டீச்சர் என்கிறார்கள் நன்றியுடன்.

         புங்க மர பயோ டீசல் கண்டுபிடிப்பின் போது இவர்களுக்கு மேலும் ஒரு உண்மை புரிந்துள்ளது.

        அதாவது, மிகக் குறைந்த வெப்பநிலையில் பயோ டீசல் திடமாக மாறக்கூடியது. ஆகவே, மிகக் குறைந்த வெப்பநிலையில் டீசல் என்ஜினை இயக்க முடியாது. சிறிது நேரம் பெட்ரோல் டீசலைக் கொண்டு என்ஜினை இயக்கிய பின்பே, பயோ டீசலைக் கொண்டு இயக்கும் நிலை உள்ளது. ஆண்டிஜெல் மற்றும் வெப்பத்தகடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினையை எளிதில் சரி செய்யலாம் என்கிறார்கள் இவர்கள்.

நாகை கலெக்டர் முன் ஆய்வை விவரிக்கும் மாணவியர்
        சமீபத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் டி.முனுசாமி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், புங்க விதையில் தயாரித்த பயோ டீசலைக் கொண்டு கார் என்ஜினை இயக்கிக் காட்டியுள்ளனர். மாணவிகளின் கண்டுபிடிப்பு விவரங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளாராம் நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர்.

        புங்க விதை பயோ டீசலின் பயன்கள் குறித்துப் பட்டியலிட்டார் மாணவிகளின் வழிகாட்டி ஆசிரியை ரோஸ்னா பர்வின்.

ரோஸ்னா பர்வின்
        ”புங்க விதை பயோ டீசல், பெட்ரோலியப் பொருட்களைப் போல் எளிதில் தீப்பிடித்து வெடிக்காது. காற்றை மாசுபடுத்தாது. அமில மழை, புவி வெப்பமடைதல் போன்றவை இந்த டீசல் பயன்பாட்டால் குறையும். இந்த பயோ டீசலில் உயவுத் தன்மை முழுவதுமாக எரியக்கூடிய பண்புடையதால், பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் எரிசக்திக்கு இணையான சக்தியை உடையது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கையில், விலைக் குறைவான பயோ டீசல் எரிசக்தியை மாற்று சக்தியாக பயன்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் உயர்த்த முடியும்” என்கிறார் ரோஸ்னா.

குணசேகரன்
         “இந்த இளம் வயதில் மாற்று எரிபொருள் கண்டுபிடித்துள்ள இந்த மாணவிகளின் ஆர்வம் பாராட்டுக்குரியது. புங்க மரம் சார்ந்த தொழிலில் ஈடுபட முன்வருவோரை ஊக்கப்படுத்தி, அரசு மானியம் வழங்கி பயோ டீசலை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால், நம் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி காண முடியும்” என்கிறார் ஹஜ்ஜா சாரா அம்மாள் பள்ளி முதல்வர் குணசேகரன்.

(நன்றி: புதிய தலைமுறை கல்வி)

Saturday, November 12, 2011

கண்மொழி!


நம் கண்கள் இமைச் சிறைகளுக்குள்
அடைபட விரும்பவில்லை
அனைவரும் தூங்கியபின் நம் கண்கள் மட்டும்
இரகசியங்களைப் பரிமாறுகிறது வெகு நேரமாக
இரகசியங்கள் வெளிப்படுமோயென சிறைவாசம்
செல்ல எத்தனிக்கிறது என் கண்கள்
அட பைத்தியமே, நம் கண்கள் பேசும்
மொழியை நம்மையன்றி யாரறிவார் என
செல்லச் சிணுங்கல் போடுகிறது அவள் கண்.

Friday, November 11, 2011

சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேருது!

--------- எஸ்.கார்த்திகேயன் --------


’குழந்தைகள் எதிர்காலத்தின் பிரதிநிதிகள்’ என்றார் ஜவஹர்லால் நேரு. அந்தப் பிரதிநிதித்துவத்தை அவர்களின் சிறு பருவத்திலிருந்தே வளர்ப்பது நம் கடமை. அதற்கு ஏட்டுக் கல்வி மட்டுமே போதுமானதாக அமையாது. சமூகம் சார்ந்த பணிகளில் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதனால் அவர்களின் பல்நோக்குத் திறன்கள் அதிகரிக்கும். இந்தக் குறிக்கோளை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட பங்கேற்பு கற்றல் ஆதார மையம்” (RCPDS - Resource Center for Participatory Development Studies) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகளுக்கான ஆக்கப் பணிகளைச் செய்து வருகிறது இந்த அமைப்பு.

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, களப்பணிகள், குழந்தைகளுக்கான உரிமைகள், வாழ்க்கைக் கல்வி என ஆர்.சி.பி.டி.எஸ் தன் ஒவ்வொரு சமூகப் பணிகளையும் இலக்குகளை குறி வைத்து தனி இயக்கங்களாக நடத்தி வருகிறது. அதன் கதாநாயகர்கள் அனைவருமே குழந்தைகள் என்பதுதான் சிறப்பம்சம். கலந்தாலோசித்தல், திட்டமிடுதல், திட்டங்களை செயல்படுத்தல்  அனைத்தும் குழந்தைகள் கையில். அவர்களுக்கு உதவி புரியும் ஒரு கருவியாக மட்டுமே ஆர்.சி.பி.டி.எஸ் இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு உதவியாக ஒவ்வொரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்களும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கின்றனர்.

தட்பவெப்ப மாற்றங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும் செயற்கை விவசாயம், அடிப்படை உணவுப் பாதுகாப்பின்மை போன்றவைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது எதிர்கால தலைமுறைகளான குழந்தைகளே. இதை கருத்தில் கொண்டு, விருதுநகர் அருகே திருச்சுழியில் தட்பவெப்ப மாற்ற நீதிக்கான குழந்தைகள் இயக்கம்ஆர்.சி.பி.டி.எஸ் சார்பில் இயங்குகிறது. குழந்தைகளே நடத்தும் பாலர் பஞ்சாயத்தும்இதனுடன் இணைந்தவை. குழந்தைகள் அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுத்த தலைவர் பாலர் பஞ்சாயத்தை நிர்வகிக்கிறார். இதன் சார்பில் இயற்கை வேளாண்மை கற்றல் மையம்இயங்குகிறது. பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். உள்ளூர் பஞ்சாயத்து சார்பில் அக்குழந்தைகளின் அடிப்படை இயற்கை விவசாயக் கற்றலுக்காக 10 ஏக்கர் பரப்பளவிலான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.சி.பி.டி.எஸ் உதவியுடன் அந்த நிலத்தை உழுது விவசாயத்திற்கு உரிய நிலமாக மாற்றிய பெருமை பாலர் பஞ்சாயத்தைச் சார்ந்த குழந்தைகளையே சாரும்.

நிலத்திற்கு உரமிடுகிறார்கள்

பாரம்பரிய விதைகளான சாமை, வரகு, திணை போன்றவைகளையே பயிரிடுகின்றனர். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகாவ்யா பயிர்ஊக்கி (பசுஞ்சாணம், பசு மூத்திரம், பால், தயிர், நெய் ஆகியவைகளின் கலவை) போன்ற இயற்கை உரங்களையே பயிர்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குழுவிலிருந்து வந்து ஒருவர், இக்குழந்தைகளுக்கு சில பயிற்சிகளை அளித்துள்ளார். இயற்கை விவசாயம், நில நீர் மேலாண்மை போன்றவைகளின் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார். வறட்சிப் பகுதியாக அறியப்படும் விருதுநகருக்கு உகந்ததான, நில நீர் மேலாண்மை பயிற்சி குழந்தைகளின் விவசாயத்திற்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.
பயிற்சியில் மாணவர்கள்
ஜான் தேவாரம்

இது பற்றி ஆர்.சி.பி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜான் தேவாரம் கூறுகையில், “குழந்தைகளின் பன்முகத் திறன் வளர்ப்பே எங்களின் முக்கிய நோக்கம். பள்ளிகளில் வாழ்க்கைக் கல்வியை கற்றுத் தருவதில்லை. ஆகவே, அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் களப்பணிகள் குறித்த பயிற்சியில் அவர்களாகவே வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக் கொள்கின்றனர். அதனால் அவர்களின் உரிமைகளைக் காக்க அவர்களே போராடுகிறார்கள். மேலும் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கும் இயற்கை விவசாய முறைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும், நாளைய வேளாண்மையும் சிறக்கும்” என்றார் புன்னகையுடன்.
(நன்றி:புதிய தலைமுறை)

Thursday, November 3, 2011

முரண்


சுதந்திர இந்தியாவின்
தேசிய விலங்கு
இந்திரா காந்தி மிருகக்காட்சி சாலையில்

Tuesday, October 18, 2011

50/50 - ஹைக்கூ!


“உலகம் சுற்றும்போது” 
எடுத்த “புகை”ப்படம்!

Monday, October 17, 2011

யாரவள்!


சூரியனும் ஒரு நொடி திகைத்து விட்டது
கரையினில் நிற்கும் நிலவைப் பார்த்து!                                                                      
நம்மை விட இப்படி ஓர் அழகியா? என                                                                            நாணி முகம் சிவந்து மறைகிறது                                                                   நங்கையவளை எதிர் கொள்ள முடியாமல்!

அலைகளின் ஆசையோ நிராசை தான்
அவளின் பாதங்களை மட்டுமே தழுவ முடிகிறது
அதுவும் சில நொடி இடைவேளைகளில்!

அவளது துப்பட்டாவையேனும் சொந்தமாக்க
அவா கொள்கிறது காற்று!

Sunday, October 16, 2011

ஹெலிகாப்டர் 007

  ----------- எஸ்.கார்த்திகேயன் ------------

 
        வெகு தொலைவில் இருந்து கொண்டே வீடியோவின் உதவியால் ஓர் அலுவலகத்தையே நிர்வகிக்க முடியுமா? திருடு போய் எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கும் ஒரு காரை உட்கார்ந்த இடத்திலிருந்தே பின்தொடர்ந்து அது சென்று சென்று கொண்டிருக்கும் சாலையைக் கண்டறிய முடியுமா? முடியும் என்கிறார்கள் விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள்.

     சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ‘நேஷனல் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்’ எனும் நிறுவனம் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கு உலக அளவிலான போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 4ம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்துவரும் சாலை ஜெயசீலன் மற்றும் மோகனப்பிரியா என்ற மாணவர்கள் கூட்டாகச் சமர்ப்பித்த , ‘லேப்வியூ கண்ட்ரோல்டு ரிமோட் சர்வைலன்ஸ் ஆர்சி ஹெலிகாப்டர்’ என்ற ஆய்வுக் கட்டுரை மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இவர்கள் எழுதியுள்ள கட்டுரை , ரிமோட் சர்வைலன்ஸ் ஆர்சி ஹெலிகாப்டர் பாதுகாப்புப் பணிகளை மையமாகக் கொண்டது. அதாவது, வயர்லெஸ்ஸை அடிப்படையாகக் கொண்டு கேமரா பொருத்தப்பட்ட சிறிய வடிவிலான ஹெலிகாப்டரை கம்ப்யூட்டர் மூலம் இயக்கி, உளவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு ரேடியோ அலைக்கற்றைகள் உதவுகின்றன.

ஹெலிகாப்டரை இயக்கும் பேனல்
ஹெலிகாப்டரில் இருந்து பெறப்படும் வீடியோ

     இந்த ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கு வந்தால் தற்போது அலுவலகங்களில் ஆங்காங்கே பொருத்தப்பட்டு , கண்காணிப்புப் பணிகளைச் செய்யும் கேமராக்களின் வேலையை இந்த ஒரே ஹெலிகாப்டர் செய்து முடித்துவிடும். செலவும் குறைவு.

     இந்தத் தொழில்நுட்பத்தின்படி கம்ப்யூட்டரிலிருந்து கொடுக்கப்படும் கட்டளைகளின் அடிப்படையில் ஹெலிகாப்டர் இயங்கும். அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவு செய்யும் வீடியோக்களை ஆர்.எஃப்.(Radio Frequency) டிரான்ஸ்மிட்டர் மூலம் தொடர்ந்து கம்ப்யூட்டருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். கேமரா மூலம் கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் வீடியோ பதிவே ஆளில்லாமல் ஹெலிகாப்டரை இயக்க கண் போன்றிருந்து உதவுகிறது. “இதன் மூலம் வெகுதொலைவில் இருந்து கொண்டே வீடியோவின் உதவியால் ஓர் அலுவலகத்தையே நிர்வகிக்கலாம். மேலும் திருடு போகும் காரினை அமர்ந்த இடத்திலேயே இருந்துகொண்டே இந்த ஹெலிகாப்டரின் உதவியால் பின்தொடர்ந்து அது சென்று கொண்டிருக்கும் பாதையை அறிந்து போலீஸாருக்கு துப்பு கொடுக்கலாம்” என்கிறார்கள் இந்த மாணவர்கள். 

மோகனப்பிரியா
ஜெயசீலன்
     சாலை ஜெயசீலன் கூறுகையில், “முக்கியமாக பாதுகாப்பிற்கு உதவும் நோக்கிலேயே இந்த புராஜெக்ட் உருவாக்கப்பட்டது. அதற்கு உலக அளவிலான போட்டியில் பரிசு கிடைத்ததும் மிக்க மகிழ்ச்சி. இந்த ஆய்வில் நான் ஹார்டுவேர் சம்பந்தமான பணிகளையும் மோகனப்பிரியா சாஃப்ட்வேர் சம்பந்தமான பணிகளையும் பார்த்துக்கொண்டோம். முதலில் பெரிய சாவாலாக இருந்தது, வயர்லெஸ் வீடியோ டிரான்சிஷன் தான். முதலில் அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி, அதற்கு நல்ல அவுட்புட் கிடைக்கலை. பின், ரேடியோ அலைக்கற்றையைப் பயன்படுத்தி ஏற்கனவே புராஜெக்ட் பண்ணியிருந்த நண்பர்கள் செல்வகணேஷ், சபரிஷ் உதவியால் ஒரு முன்னேற்றம் கிடைத்து, அந்த புராஜெக்டை முடிக்க முடிந்தது” என்றார் பெருமிதத்துடன்.

சபரிஷ் மற்றும் செல்வகணேஷ்
     சாலை ஜெயசீலனுடன் பயிலும் சக மாணவர்களான செல்வகணேஷ், சபரிஷ் ஆகியோரைப் பற்றி இங்கு கூறியே ஆக வேண்டும். ’டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்’ என்ற அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் நடத்திய, ‘அனலாக் டிசைன் கான்ட்டெஸ்ட்’ என்ற போட்டியில் இவர்களது புராஜெக்ட் முதல் பரிசை வென்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட்டுகளில்  ஒவ்வொரு வாகனமும் நின்று பணம் செலுத்திவிட்டுச் செல்லும். ஆனால், அப்படி நிற்கவே வேண்டியதில்லை என்று அதற்கு ஒரு மாற்றுவழியைச் சொல்கிறது இவர்களது புராஜெக்ட்டான ஆட்டோமேட்டிக் இ-டோல்கேட்.

     ரேடியோ அலைக்கற்றையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இ-டோல் கிட் என்ற கருவியை வாகனத்தில் பொருத்த வேண்டும். அதேபோல் டோல்கேட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதே போன்றதொரு கருவி இருக்கும். இக்கருவிகளின் தயாரிப்பு விலை முறையே காரில் பொருத்தும் கருவி ரூ250ம் டோல்கேட்டில் பொருத்தும் கருவி ரூ3000ம் ஆகும். மொத்தமாகக் கொடுக்கும்போது, இந்தத் தொகையும் குறைய வாய்ப்புள்ளது என்கின்றனர்.

     இது எப்படிச் செயல்படுகிறது? வாகனம் டோல்கேட்டை கடக்கும் போது, அலைக்கற்றையின் உதவியால் வாகனத்தின் எண் சரிபார்க்கப்பட்டு கம்ப்யூட்டரில் அந்த எண்ணுக்குச் சொந்தக்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் வசூலிக்கப்பட்டுவிடும் (மாடல் புராஜெக்ட்டில் மொபைல் போனில் பணம் வசூலிப்பதுபோல் வடிவமைத்திருக்கின்றனர்). அதற்கான செய்தி மற்றும் இருப்புத்தொகை அவர் மொபைலுக்குப் போய்விடும். கண் இமைக்கும் நேரத்தில் இந்த வேலைகள் நடந்து முடிந்து உடனே கேட் திறந்துவிடும். பேலன்ஸ் தொகை இல்லாவிட்டாலோ அல்லது இ-டோல் கிட் கருவி பொருத்தப்படாமல் இருந்தாலோ கேட் திறக்காது. அந்த நேரத்தில் அவர்கள் அங்கேயே ரீசார்ஜ் செய்யலாம் அல்லது கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்தால் கம்ப்யூட்டரில் தானியங்கி ஆப்ஷனை மாற்றி, கேட்டை திறப்பார்கள். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் முதலிலேயே அக்கருவியை வாகனங்களில் பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கின்றனர்.


     சபரிஷ் கூறுகையில், “இ-டோல் கிட் கொடுக்கும் பயன்கள் எண்ணற்றவை. முக்கியமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர் போதும். டிராபிக் ஜாம் ஏற்படாது, நேரம் மிச்சப்படுத்தப்படும். வாகன எரிபொருள் மிச்சமாகும். ஒவ்வொரு டோல்கேட்டிலும் நின்று நேரம் விரயமாகும் நிலை இருக்காது. இம்முறையில் ஒரு மணி நேரத்தில் 1500 வாகனங்கள் கேட்டைக் கடக்கலாம். இதைப் பற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் பேசுவதற்கு முயன்றும் வாய்ப்புகள் நழுவிச் சென்றன. இந்த இ-டோல் கிட் புராஜெக்ட்டை நடைமுறை வாழ்க்கையில் கொண்டுவந்து ஒழுங்காக முறைப்படுத்தினால் பலன் கைமேல் கிடைக்கும்” என்றார்.

(நன்றி: புதிய தலைமுறை)

Tuesday, September 20, 2011

சவாலே சவாரி !

----------- எஸ்.கார்த்திகேயன் --------------- 

   ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரிஎன்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களுக்கென்றெ பல்வேறு சாகசப் பயிற்சிகளும், போட்டிகளும் நடத்தி வருகிறது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அட்வெஞ்சர் சோன்என்ற நிறுவனம். முன்னாள் இராணுவ வீரர் மேஜர் எஸ்.ஆர். ராய் என்பவர் இதனை ஆரம்பித்து தற்போது நிர்வகித்து வருகிறார். 


    ஜீப் த்திரில்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அட்வெஞ்சர் சோன் சமீபத்தில் தி பாலாறு சேலஞ்ச்என்ற போட்டியை நடத்தியது. ரோடு அல்லாத இடங்களில் ஜீப் ஓட்டுதலை மையமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது. மதுராந்தகம் அருகே பாலாறு ஆற்றின் கரடு முரடான பாதைகள், அதிகம் மணல் பாங்கான இடங்கள், நீர் நிறைந்த குட்டைகள், கடினமான பாறைகள் இவைகளே ஜீப் ஓட்டும் போட்டிக்கான பாதைகள். தடைகளும் அவைகளே. அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.
    பொதுவாக ரேஸ் என்றாலே போட்டிக்கும் சவாலுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் ரேஸ் அல்லாத பல்வேறு தடைகளைக் கடந்து பந்தய தூரத்தை நிறைவு செய்யும் வித்தியாசமான   இப்போட்டியின் முக்கிய அம்சமே கூட்டு முயற்சியை மையமாகக் கொண்டது. ஒரு குழுவிற்கு மூன்று ஜீப்புகள் வீதம் மொத்தம் 13 குழுக்கள் போட்டியில் பங்கு பெற்றன. போட்டிக்கான பாதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை இடையில் ஸ்பெஷல் ஸ்டேஜ்(எஸ்.எஸ்) எனப்படும் ஏழு தடைகள் இருக்கும். ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு ஸ்பெஷல் ஸ்டேஜில் இருந்து போட்டியைத் துவக்குவர். பல்வேறு தடைகளைக் கடந்து மீண்டும் துவக்கிய இடத்திலேயே போட்டியை முடிப்பர். அதாவது ஒரு குழு எஸ்.எஸ் 3ல் போட்டியைத் துவக்கினால் அவர்கள் மற்ற ஸ்பெஷல் ஸ்டேஜ்களை கடந்து மீண்டும் எஸ்.எஸ் 3ல் போட்டியை நிறைவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தடையை வெற்றிகரமாக முடிப்பதற்கான மொத்த நேரம், தடையைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு குழுவிற்கும் பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டன.

    முதல் நாள் ஒரு பகுதியிலும், இரண்டாம் நாள் பாலாற்றின் மற்றொரு பகுதியிலும் போட்டி நடத்தப்பட்டது. இயற்கையாக அந்த ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள நிலப் பரப்பின் தடைகளுடன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் போட்டி முறைகளும் அவர்களுக்குத் தடையாக அமைந்தன. முதல் நாளில் எஸ்.எஸ் 4-ல் கொடுக்கப்பட்ட போட்டி முறை என்னவென்றால் ஒரு குழுவில் உள்ள மூன்று ஜீப்புகளில் போட்டியாளர்கள் ஏதேனும் இரண்டு ஜீப்புகளைத் தேர்ந்தெடுத்து ஒன்று மற்றொன்றைக் கட்டி இழுக்க வேண்டும். இழுக்கப்படுகின்ற ஜீப் என்ஜினை ஆஃப் செய்துவிட வேண்டும். அந்த இரு வாகனங்களும் போட்டி நடத்தும் குழுவினரால் வரையறுக்கப்பட்ட பாதையிலேயே சென்று எஸ்.எஸ் 4 ஸ்டேஜை முடிக்க வேண்டும். அதே எஸ்.எஸ் 4 ஸ்டேஜில் இரண்டாம் நாள் கொடுக்கப்பட்ட போட்டி முறை, ஜாக்கியைப் பயன்படுத்தாமல் ஒரு குழுவில் உள்ள மூன்று ஜீப்புகளிலும் ஒரு சக்கரத்தைக் கழட்டி ஸ்டெப்னி மாற்ற வேண்டும். இதை அவர்கள் 20 நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டும். சிலர் மணல் மேடுகளில் ஜீப்பை நிறுத்தி சக்கரத்தைக் கழட்டினர். மற்றும் சிலர் ஒரு ஜீப்பால் மற்றொரு ஜீப்பை கயிறு கட்டி இழுத்து ஒரு பகுதியைத் தூக்கி சக்கரத்தைக் கழட்டி மாற்றினர். ஒரு சில அணியினரே மூன்று ஜீப்புகளிலும் சக்கரத்தைக் கழட்டி மாற்றினர். அதற்குத் தகுந்தவாறு பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டன. இந்த டெக்னிக்கல் ஸ்டேஜைத் தவிர மற்றவை இயற்கையால் அமைந்த தடைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.
    அருகருகேயுள்ள செங்குத்தான 5 மணல் மேடுகளில் ஜீப்பை ஏற்றி இறக்கி அவற்றைக் கடந்து வெளியே வர வேண்டிய ஸ்டேஜில் பல வாகனங்கள் பழுதாகி நின்றன. இரண்டாம் நாள் போட்டியின் போது ஒரு ஜீப் வேகமாக மேட்டில் ஏறி பறந்து சென்று பாறை மேல் விழுந்து நொறுங்கிப் பழுதானது. ஜீப்பின் சொந்தக்காரர், ’ஜீப் உடஞ்சத பத்தி கவலையே இல்லை, நம்ம சாகசத்த பாத்து நாலு பேரு சந்தோசப்பட்டாங்கள்ல அதுவே போதும் என்றார் உற்சாகமாக.
    சாகசமும் சவாலும் சரிவிகித்த்தில் கலந்திருக்கும் இந்த ஜீப் ஓட்டுதல் போட்டி மூலம் ‘எந்த தடைகளையும் துணிவோடு எதிர்கொண்டு அவற்றை கடந்து சென்று வெல்கிற மன உறுதி கிடைக்கிறதுஎன்றனர் பல இளைஞர்கள்.

    போட்டியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் சென்னையைச் சேர்ந்த போட்டியாளரான மகேந்திரன். இவர் ஒரு மாற்றுத் திறனாளி, வலது கையை இழந்தவர். ஆனால் இவ்வளவு கடினமான போட்டியில் கலந்து கொண்டு மிகத் திறமையாக ஜீப் ஓட்டினார். 
                               மகேந்திரன்
     தனி நபருக்கான ஜீப் ஓட்டும் போட்டியில் மகேந்திரன் மிகத் திறமையாக ஜீப் ஓட்டி முடிக்கும் தருவாயில் ஜீப் பந்தயப் பாதையை விட்டு விலகியதால் பாதியிலேயே திரும்பினார். ஆனாலும் மகேந்திரன் 4 வீல் டிரைவில் சிறந்த செயல்பாட்டிற்கான இரண்டாவது பரிசு பெற்றார்.
மேஜர் ராய்

    ’தி பாலாறு சேலஞ்ச்நிர்வாகியான மேஜர் ராய் கூறுகையில்: இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஐடி கம்பெனிகளில் பணிபுரிபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் என நாள்தோறும் மன அழுத்தத்துடன் செயல்படுபவர்கள். அவர்கள் அனைத்தையும் மறந்து விட்டு சந்தோசமாக இருப்பதே எங்கள் நோக்கம். அவர்களுக்கு இது ஒரு ஆரோக்கியமான போட்டியாகவும், கூட்டு முயற்சியைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும் சாகசத்தை விரும்புபவர்களுக்கு நல்ல வடிகாலாகவும் இருக்கிறது என்றார்.

(நன்றி: புதிய தலைமுறை) 

------------------------------
புதிய தலைமுறையில் வெளிவராத மற்றும் சில படங்கள்......................

இரு சக்கரங்களில் நடனமாடும் ஜீப்புகள்!




 ---------------------------





Saturday, August 20, 2011

ஆங்கிலமும் நாப்பழக்கம்...

....... எஸ்.கார்த்திகேயன்.........

                அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்றாலே அச்சம்தான். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகள். ஆனால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒத்தப்பட்டி கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் குறித்துக் கவலை இல்லை. நுனிநாக்கு ஆங்கிலம் அவர்களுக்கு அத்துப்படி. இந்தக் கிராம மாணவர்களின் அனைவரது வீட்டிலும் ஆங்கில உரையாடல்களே ஒலிக்கின்றன. படிப்பறிவு இல்லாத அந்தப் பெற்றோர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, ‘நம்ம பிள்ளையும் தஸ் புஸ்னு இங்கிலீபீஸ்ல பேசுதே’  என்கிற பூரிப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

    நரையன்குளம் ஒத்தப்பட்டியில் அமைந்துள்ள இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200 மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானோர் தலித் மாணவர்கள்.

நோ.... தஸ்.. புஸ்.. ஒன்லி இங்கிலீஸ்!
         ‘நம் கிராம மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறனும் முக்கியம்’ எனக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்குத் தங்கள் சொந்த செலவில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இங்குள்ள பள்ளி ஆசிரியர்கள். இவர்களில் ஒருவரான ஜெயக்குமார் கூறும்போது,

ஜெயக்குமார்
        “நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் அதிகம் செலவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி தர்றாங்க. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு அந்த அளவுக்கு வசதி கிடையாது. தற்போது அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கென தனி வகுப்புகள் கிடையாது. இங்கிலீஷ் ஒரு பாடமாக இருந்தாலும் அது ஏட்டுக் கல்வியாக இருக்கிறதே தவிர, மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லை.

   இந்த நிலையில் ஒரு தனியார் அகாடமி மூலம் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கலாம் என்று தோன்றியது. பின்னாட்களில் அவர்கள் மேற்படிப்புகளுக்காக நகரங்களுக்குச் செல்லும்போது ஆங்கிலம் பேசுவதில் எந்தவிதமான தயக்கமும் இருக்கக் கூடாது என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறோம். மாணவர்கள் தங்களிடையே பேசிக் கொள்ளும்போதும் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாடும் போதும் ஆங்கிலத்திலேயே பேசிப் பழகச் சொல்கிறோம்.

   இப்படித்தான் எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் பாட்டியிடம் சென்று, ‘ஹாய் கிராண்ட்மா... வேர் ஆர் யூ கோயிங்?’  என்று கேட்டிருக்கிறான். ஆங்கில வாசனையையே அறியாத அந்தக் கிராமத்து மூதாட்டி, தன் பேரன் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டு, பூரித்துப் போன பாட்டி தன் சுருக்குப் பையில் இருந்து நூறு ரூபாயை எடுத்து பரிசாகக் கொடுத்துள்ளார்” என்று பூரிப்புடன் கூறுகிறார் ஜெயக்குமார்.

      ’ஸ்போக்கன் இங்கிலீஷ் அகாடமி நடத்தி வரும் சிவசுப்பிரமணியன் பகுதி நேரமாக இப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார். ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணம், ஆங்கிலத்தில் கதை சொல்லுதல், உரையாடல்கள் போன்ற அடிப்படைகளைக் கொண்டு ஆங்கிலம் கற்பித்து வருகிறார் இவர்.
சிவசுப்பிரமணியன்
      ”முதலில் கிராமப்புற மாணவர்களுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுக்குறதுல சிரமம் இருக்குமே என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்கள் பசுமரத்தாணி போல் சொல்லிக் கொடுக்கும் இங்கிலீஷை உடனடியாக உள்வாங்கிக் கொண்டனர். நான் எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் இங்கிலீஷ்லதான் கொடுப்பேன். அதை எளிதாகப் புரிந்து கொள்கின்றனர். பதிலும் இங்கிலீஷிலேயே சொல்லுவார்கள். நான் பேசுவதற்கான அனைத்து பயிற்சிகளும் கொடுத்துடுவேன். அதன்பின் இப்பள்ளி ஆசிரியர்கள் தான் இங்கிலீஷ்ல எழுத்துப் பயிற்சி, வாசிப்புத்திறன் போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கின்றனர்” என்கிறார் சிவசுப்பிரமணியன்.

     பள்ளியின் தலைமயாசிரியர் ஜெசிந்தா கூறுகையில், “தற்போது காலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரையும் மாலை பள்ளி முடிந்த பின்பு 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடக்குது. ஒரு வாராத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தினமும் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது கிளாஸ் நடக்கிறது” என்றார்.

         இவை மட்டுமின்றி எல்லா விதத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளனர் இப்பள்ளி ஆசிரியர்கள். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் மேல்நிலைக்கல்வி மற்றும் கல்லூரிப் படிப்புகளில் சேர இயன்ற உதவிகளைச் செய்கிறார்கள். இப்பள்ளியில் படித்து பின் ஆசிரியர் பயிற்சி முடித்த தலித் பெண் ஒருவரை, அதிகாரிகள் அனுமதியுடன் அதே பள்ளியில் பகுதி நேர ஆசிரியையாக பணியமர்த்தியுள்ளனர்.

         கோடை விடுமுறைகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன் முக்கிய நோக்கமே அவர்கள் பயிற்சியில் கற்றதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே. ஆனால் மற்ற பாடங்கள் எடுக்கும் அந்த ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொடுக்க நேரம் இருக்காது.

      ஆகவே, அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொடுக்க தனி ஆசிரியர்களை நியமித்து பயிற்சிக்கென கால அட்டவணையிலேயே தனி நேரம் ஒதுக்கலாமே.

(நன்றி: புதிய தலைமுறை)

Friday, July 15, 2011

ஸ்பைடர் உமன்!

- எஸ்.கார்த்திகேயன் -

                                               ஜெயபாரதி.                                படம்: கா.கே

”வீடுகளின் மூலை முடுக்குகளில் படிந்திருக்கும் ஒட்டடையைச் சுத்தம் செய்யும்போது , சிலந்திகளையும் சேர்த்து துடைத்து எடுத்து அப்புறப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், கொசுக்களைக் கட்டுப்படுத்துவதே சிலந்திகள்தான். அவற்றின் மூலம் நமக்கு நன்மையே ஏற்படுகிறது” என்கிறார் டாக்டர் ஜெயபாரதி. இவர் சிலந்திகள் மற்றும் அவை பின்னும் வலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விலங்கியல் துறை பேராசிரியை.

     மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ‘பெண் விஞ்ஞானிகள் திட்டம்’ மூலம் தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் செய்யும் ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபாரதி சிலந்தி வலையின் உயர் இயந்திரவியல், மூலக்கூறு, வேதியியல் தன்மை ஆகியன பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரது ஆராய்ச்சிக்கு மத்திய அரசு 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

    “மருத்துவத்துறையில் மிக நுண்ணிய பகுதிகளில் ஆபரேஷன் செய்யும்போது, தையல் போடுவதற்கும், பேண்டேஜ் தயாரிப்பிலும் சிலந்தி வலை பயன்படுத்தப்படுகிறது. அத்லெடிக் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் துணிகள் தயாரிப்பிலும் இந்த வலைகள் பயன்படுகிறது. ஒன்றரை மீட்டர் வரை வலை பின்னக் கூடிய நெஃபிலா என்ற சிலந்தியின் வலை பாராசூட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. நானோ டெக்னாலஜியில் சிலந்தி வலை முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயத்திலும் சிறந்த பங்காற்றுகிறது” சிலந்தி வலையினால் இத்தனை பயன்களா என்று வியக்கத்தக்க அளவுக்கு அதன் பயன்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.

    சிலந்தியின் ஜீனையும் பட்டுப் புழுவின் ஜீனையும் இணைத்து இவர் செய்யும் ஆராய்ச்சி முக்கியமானது.

    “சிலந்திகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கு. அப்படியே கண்டுபிடிச்சாலும் அவற்றை ஆராய்ந்து அதன் வகைகளைக் கண்டறியணும். அது பின்னும் வலைகளின் தன்மை பற்றி ஆராயணும்.

    ஒரே மாதிரியான டி.என்.ஏ மற்றும் புரோட்டீன்களைக் கொண்ட சிலந்தி மற்றும் பட்டுப் புழுவின் ஜீன்களை இணைத்து புது வகையான சிலந்தி அல்லது பட்டுப் புழுவை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன். அவ்வாறு ஒரே மாதிரியான ஜீன்கள் கொண்டவைகளைக் கண்டு பிடிக்கறதுல சற்று சிரமம் இருக்கு. ஏறத்தாழ 4000 வகையான சிலந்திகள் கண்டறியப்பட்டுள்ளன. எவரெஸ்ட் சிகரத்தின் 23 அடிகளில் கூட சில அரிய வகை சிலந்திகள் உள்ளன. நான் தற்போது 29 வகையான சிலந்திகளை சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். அவற்றுள் முக்கியமானது சில்வர் கார்டன் ஸ்பைடர்.

    சிலந்தி மற்றும் பட்டுப் புழுவின் ஜீனை இணைப்பதால் ரீ காம்பினெண்ட் சில்க் கிடைக்கிறது. தற்போதுள்ள பட்டுப் புழுக்களால் கிடைக்கும் நன்மைகளைக் காட்டிலும் புதுமையாக உருவாக்கப்படும் இந்த உயிரினத்தின் மூலம் பட்டு நூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். பட்டுப் புழுவின் ஜீனை இணைத்து புதுமையாக உருவாக்கப்படும் சிலந்தியும் நூல் உற்பத்தியில் பல்வேறு நன்மைகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு உருவாக்கப்படும் நூல் தற்போது பயன்படுத்தப்படும் நூல்களைக் காட்டிலும் உறுதியாக இருக்கும்” என்றவர் தொடர்ந்து, “தற்போது விவசாயத் துறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள் விவசாயிகள். அது தேவையே இல்லை” என்றவர் தொடர்ந்து,

     “சிலந்தியின் ஒரு முட்டையில் 500 எண்ணிக்கையிலான சிலந்திகள் உருவாகும். அவற்றை வயல் வெளிகளில் விட்டால் சிலந்திகளின் எண்ணிக்கை பெருகும். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிலந்திகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிலந்திகள் மிகச் சிறிய பூச்சி முதல் வெட்டுக்கிளியைக் கூட அழித்து விடும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வலை பின்னாத சிலந்திகளே முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றிற்கு ‘பயாலஜி கண்ட்ரோல் ஏஜெண்ட்’  என்று பெயர். பூச்சிகளை அழிக்க சிலந்திகளைப் பயன்படுத்துவதும் இயற்கை விவசாயத்தில் ஓர் உத்திதான்.” என்றார்.

     இவரது ஆராய்ச்சி அனுபவத்தின் மூலம் கண்டறிந்த சிலந்தி வகைகளைப் பற்றி புத்தகம் ஒன்றையும் ஜெயபாரதி எழுதிக் கொண்டிருக்கிறார்.

     “சிலந்தி வலை ஆராய்ச்சி இந்தியாவில் குறைவாக உள்ளது. எனக்கே ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் சரியாகக் கிடைப்பதில்லை. ஆனாலும் என்னால் முடிந்த அளவு முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். எத்தனை முறை வலை அறுந்தாலும் சிலந்தி உடனே அதைப் பின்னி விடும். அதுபோல எத்தனை தடைகள் வந்தாலும் விடா முயற்சியுடன் எனக்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். எனது ஆராய்ச்சி எதிர்காலச் சந்ததியினருக்கு சிறிதளவேனும் உதவும் என நம்புகிறேன்...” என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் ஜெயபாரதி. 

‘பெண் விஞ்ஞானிகள் திட்டம்’ பற்றி தெரிந்து கொள்ள: www.dst.gov.in/scientific-programme/women-scientists.ht

(நன்றி: புதிய தலைமுறை)

Sunday, July 10, 2011

அரசியல் வியாபாரம்!

பொன்னி .. ஒரு சொம்பு தண்ணி எடுத்தாம்மா.....

’இந்தா வாறேன்ப்பா’......

வீட்டு வாசலில் உள்ள கல்லில் அமர்ந்து பல் துலக்கிக் கொண்டிருக்கிறார், முனுசாமி.

என்னைய்யா இன்னும் வேலைக்குக் கிளம்பலையா? என்று கேட்டுக் கொண்டே வருகிறான் கருவாயன்.

இல்லைய்யா, முருகன் கொத்தனார் ஒரு வாரம் வேலை இல்லைனுட்டாரு. டவுண்காரப் பயலுகலும் வேலைக்கு கூப்பிட மாட்டேங்கிறாய்ங்க. என்ன செய்யுறதுனு தெரியாம உட்காந்துக்கிட்டிருக்கேன்.

’இந்தாங்கப்பா தண்ணி’....

தண்ணீரைக் கொடுத்து விட்டு, வாசலில் கிடந்த பாத்திரங்களை துலக்குவதற்கு அமர்ந்து விட்டாள் பொன்னி.

காலைல 10 மணிக்கு  உட்காந்து பல்லு விலக்கும் போதே தெரியுது, நீரு  சும்மாதான் இருக்கீர்னு. சாயங்காலம் ஒரு இடத்துக்கு வர்றீரா? சம்பளம் 250 ரூபா கிடைக்கும், சும்மா உட்கார்ந்திருந்தா போதும் என்கிறான் கருவாயன்.

அதென்ன வேலைய்யா, சும்மா உட்கார்ந்திருக்குற வேலை?

அது ஒண்ணுமில்ல, டவுண்ல எதிர்க்கட்சிக்காரங்க மாநாடு நடத்துறாங்க, அதுல கலந்துக்கத்தான் 250 ரூபா. நாள மறுநாளு ஆளுங்கட்சிக்காரங்க மாநாடு நடக்குது, அதுல கலந்துக்கிட்டா 500 ரூபா தர்றாங்க. சாயங்காலம் நான் போறேன், நீரு வர்றீரா?

’இல்லையா, நான் வரலை’....

பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீரே, ‘வாழப் பழத்த உரிச்சு தான் தர முடியும் ஊட்டியுமா விட முடியும்’

சாயங்காலந்தானே மாநாடு, நான் யோசிச்சி சொல்றேன்.

அப்பா, குளிக்கிறதுக்கு வெந்நீரு வைக்கவா? என்கிறாள் பொன்னி.

இல்லம்மா, பச்ச தண்ணிலயே குளிச்சிக்கிறேன்.

பொன்னியோட அம்மா போனதுக்கு அப்புறம், இவளுக்காக தான் இன்னும் உசுரோட இருக்கேன். நல்லா படிக்க வைக்கிறதுக்கும் வசதியில்ல. ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்திட்டா நானும் நிம்மதியா போய்ச் சேர்ந்திருவேன்.

சரி.. சரி.. பழசெல்லாம் எதுக்கு? விடய்யா. நான் சாயங்காலம் 4 மணி போல வர்றேன் என்று கூறி விட்டுக் கிளம்பினான் கருவாயன்.

அப்பா, கூரையெல்லாம் பழசாயிருச்சு, ஒரே செத்தையா இருக்கு, மழையடிச்சா ஒழுகுது. புதுக் கூரை மாத்தணும்ப்பா.

நீ உண்டியலில கொஞ்சம் பணம் சேர்த்து வைச்சிருந்தேலம்மா, அதை எடுத்து வை, நான் குளிச்சிட்டு வர்றேன் என்கிறார் முனுசாமி.

பொன்னி, அந்த பணத்தை கொண்டு வா, கடை வரைக்கும் போகணும்.

புதுக் கூரைங்க வாங்கவாப்பா?

மெளனத்துடன் நகர்கிறார் முனுசாமி.

கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய முனுசாமி, ஒரு பை நிறைய சில திண்பண்டங்களுடன் வீட்டினுள் நுழைகிறார்.

’என்னப்பா’ இவ்வளவு பண்டங்கள், யாரும் விருந்தாளிங்க வர்றாங்களா?

பொன்னியின் கேள்விக்கு பதில் ஒன்றும் கூறாமல் வந்த களைப்பில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார் முனுசாமி.

சாயங்காலமாச்சு! விருந்தாளிகளும் யாரும் வர்ற மாதிரி தெரியலை. அப்பா வாங்கியாந்த பண்டங்களெல்லாம் அப்பிடியே இருக்கு.... என்று புலம்பிக் கொண்டே இருந்தாள் பொன்னி. அப்போது அங்கு வந்த கருவாயன், பொன்னி உங்க அப்பாவைக் கூப்பிடு, மாநாட்டுக்கு வர்றாரா இல்லையான்னு கேளு? என்றான்.

வேறு வழியில் வருகிறேன், என்கிறார் முனுசாமி.

என்னத்தையா சொல்றீரு, ஒன்னும் விளங்க மாட்டிக்குது என்றான் கருவாயான்.

பொன்னி, அந்த தின்பண்டங்களை எல்லாம் எடுத்தாம்மா...

இந்தாங்கப்பா..... அப்பா இதெல்லாம் யாருக்கு?

டவுண்ல கட்சி மாநாடு நடக்குதுல, அங்க கூட்டம் நெறையா வரும், இந்த பண்டங்கள் எல்லாம் அங்க கொண்டு போய் விக்கிறதுக்குத் தான் என்று கூறி விட்டுக் கிளம்பினார் முனுசாமி.

நின்று கொண்டிருந்த கருவாயன் எதுவும் பேசாமல் வெடுக்கென்று கிளம்பி விட்டான்.

கட்சி மாநாட்டில், ’தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க’ என்று கத்திக் கொண்டிருந்தான் கருவாயன். 

’தன் தின்பண்டங்களின் பெயர்களை வாய் வலிக்க '.............. கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார் முனுசாமி.

Thursday, June 23, 2011

இண்டர்ன்ஷிப் டிரெய்னிங் - தினமலரில் நான்

எங்கள் கல்லுரியில் ஏதேனும் ஒரு மீடியாவில் இண்டர்ன்ஷிப் டிரெய்னிங் செய்யணும்னு சொன்னாங்க........... அதாவது கல்லூரியில் படிக்கும்போதுஅவரவர்  படிப்பு சம்பந்தமான துறையில் பயிற்சி பெறுவதுதான் இண்டர்ன்ஷிப். நான் காட்சித் தொடர்பியல் படிப்பதால் அவை சம்பந்தமான துறையில் பயிற்சி பெற வேண்டும். அந்த விதத்தில், நான் அச்சு ஊடகத்தில் பயிற்சி பெற விரும்பி, 
27 மே 2011 முதல் 10 ஜுன் 2011 வரை, ஆகிய 15 நாட்கள் ”தினமலர்” நாளிதழின் சென்னை அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்தில் பயிற்சி பெற்றேன்.

பயிற்சி மாணவராக இருந்தாலும், பயிற்சிக் காலத்தில் நான் எடுத்த புகைப்படங்களை செய்திகளுக்குப் பயன்படுத்திய ’தினமலர்’ நாளிதழுக்கு நன்றி.

கீழே உள்ள, நான் எடுத்த புகைப்படங்கள் தினமலரில் பிரசுரமானவை.


மே 31 2011 - தினமலர் முதல் பக்கம்

இன்றே கடைசி:  பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிகிறது. நேற்று காலை, அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பங்களை வாங்க காத்திருந்தவர்கள்.


  ஜூன் 6 - தினமலர், 2 ம் பக்கம், சென்னை மாநகரச் செய்திகள்

லோக்பால் மசோதா தொடர்பாக, ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில், ஆர்வமுடன் கையெழுத்திடும் பொதுமக்கள்.
     
                     
ஜூன் 6 2011 - ஆன்லைன் தினமலர்                                                      http://www.dinamalar.com/districtevent_detail.asp?news_id=252962

ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்குகொண்டு, ஆர்வமுடன் ஓவியம்  வரையும் குழந்தைகள்


  ஜூன் 8 2011 - தினமலர், 2 ம் பக்கம், சென்னை மாநகரச் செய்திகள்

சென்னை, தி.நகர்  உஸ்மான் சாலையை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகளை, மாநகராட்சியினர் மற்றும் போலீசார் தொடர்ந்து அகற்றி வருவதால், சாலையில் சிரமமின்றி, பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.
அடுத்த படம்:  பாலத்தின் அடியில் ஆக்கிரமித்துள்ள கடைகள்.

                                                                                            (நன்றி: தினமலர்)

Monday, June 20, 2011

சொந்தக் காலில் நிற்கிறது ஒரு தன்னம்பிக்கை !

- எஸ்.கார்த்திகேயன் -

நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர், ஆட்டோ டிரைவர்
+ மூன்று ஆட்டோக்களுக்குச் சொந்தக்காரர்


              யார் கிண்டல் பண்ணினாலும், நம்மால் முடியாதுன்னு டிஸ்கரேஜ் செய்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிட்டுடக் கூடாது...” என்கிறார் மாற்றுத் திறானாளியான சங்கரலிங்கம்.1971ம் வருடம், சிவகாசிக்கு அருகிலுள்ள கிராமத்தில் ஓர் ஏழ்மைக் குடும்பத்தில், ஆறு குழந்தைகளுள் நான்காவது ஆணாகப் பிறந்தவர் இவர். அண்ணன்களைக் காட்டிலும் பிறந்து 8வது மாதத்திலேயே நடக்க ஆரம்பித்த சங்கரலிங்கத்தை மூன்றாவது வயதில் தாக்கியது போலியோ. வீட்டில் உள்ளவர்களுக்கு அவர் குறித்த கவலை. வெளியில் கேலி, கிண்டல் பேச்சுக்கள். அவற்றையெல்லாம் கடந்து இன்று வெற்றி மனிதராக உலா வருகிறார் சங்கரலிங்கம்.

     ”நான் 8வது படிச்சுக்கிட்டிருந்தபோது, குடும்பநிலை காரணமாக என் படிப்பு நின்றது. சில வருடங்கள் அப்பா வைத்திருந்த பெட்டிக்கடையில் அவருக்கு உதவியாக வேலை செய்து பார்த்தேன். அப்பாவின் உடலும், தொழிலும் மிகவும் மோசமடைந்ததால், எனது 19வது வயதில் எங்கள் குடும்பம் கிராமத்திலிருந்து சிவகாசிக்குக் குடிபெயர்ந்தது.

      சில காலம் டீக்கடையில் வேலை செய்தேன். சம்பளம் குறைவாக இருந்ததால், தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனாலும் அதில் எனக்கு திருப்தி இல்லை.”

      இந்த நிலையில் சொந்த காலில் நிற்க விரும்பிய அவர், பிளாட்பாரத்தில் காய்கறிக் கடை ஒன்றை ஆரம்பித்தார். இவரது அம்மாதான் கடைக்குத் தேவையான காய்கறிகளையெல்லாம் மார்க்கெட்டிலிருந்து வாங்கி வருவார். தினமும் தாய் படும் கஷ்டங்களைப் பார்த்து காய்கறித் தொழிலைக் கைவிட்டு விட்டார்..

      “பிறகு நண்பர்கள் உதவியால் சிறிய பெட்டிக்கடை வைத்தேன். ஏஜெண்ட்களே கடைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்துடுவாங்க. அப்போதான், அண்ணன் வைத்திருந்த ஆட்டோவை ஓட்டிப் பழகினேன். ஆட்டோ ஓட்டறது
பிடிச்சிருந்தது. அதுவே பின்நாளில் எனக்குக் கை கொடுத்தது” என்கிறார். “ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யப் பிடிக்காததால், சொந்தமாக ஆட்டோ வாங்க அரசு வங்கியில் கடன் கேட்டேன். சில சிரமங்களுக்குப் பிறகு நண்பர்கள் உதவியால் கடன் கிடைத்தது.

      ஆட்டோ ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனது இடதுகாலை மட்டுமே பயன்படுத்தி பிரேக்கை கண்ட்ரோல் செய்வேன். அவ்வப்போது தேவைப்பட்டால் சிரமப்பட்டு வலது காலை பயன்படுத்துவேன். எந்த நேரமாக இருந்தாலும் நேரிலோ, செல்போன் மூலமோ எப்போது சவாரி வந்தாலும் சென்று விடுவேன். பயணிகளின் ஆதரவுதான் முக்கியம்” என்றவர், தொடர்கிறார். “அதே அரசு வங்கியில் கடன் வாங்கி இரண்டாவது ஆட்டோவும் வாங்கினேன். இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்து இரண்டு ஆட்டோவுக்கும் கடனைத் திருப்பியளித்த நிலையில், மூன்றாவது ஆட்டோ வாங்க கடன் கேட்டபோது, வங்கி கடன் தர மறுத்தது. பின் தனியார் வங்கி ஒன்றின் உதவியால் மூன்றாவது ஆட்டோ வாங்கினேன். தற்போது அதன் கடன் தொகை முடியும் தருவாயில் உள்ளது” என்கிறார் புன்னகையுடன்.

      ஒரு ஆட்டோவிற்கு, தான் டிரைவராகவும், மற்ற இரண்டிற்கு சம்பளத்திற்கு டிரைவர்களை வைத்திருக்கிறார். இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் சங்கரலிங்கம், இந்த மூன்று ஆட்டோக்களும் என் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.    

(நன்றி: புதிய தலைமுறை)